#Breaking:”இது பொய் வழக்கு” – சபாநாயகருக்கு காங். எம்பி கார்த்தி சிதம்பரம் கடிதம்!

பஞ்சாப்பில் உள்ள தனியார் மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கு சீன பொறியாளர்கள் அதிக அளவில் தேவைப்பட்டதாக கூறும் நிலையில், 250-க்கும் அதிகமான சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டு,நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் மீது சிபிஐ அதிகாரிகளால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் இவர்கள் தொடர்பான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியிருந்தது. இதன்பின்,சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக பாஸ்கர ராமன் மீது வழக்கு வழக்குப்பதிவு செய்யபட்டது.சென்னையில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்,மேலும் 3 நாள் சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,விசா முறைகேடு வழக்கு தொடர்பாக எம்பி கார்த்தி சிதம்பரதின்மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து,அவரை நேரில் அழைத்து விசாரிக்க நோட்டீஸ் அனுப்பவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே,முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் தரப்பில் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.ஆனால்,அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் அவரை கைது செய்ய விரும்பினால் முன்கூட்டியே கார்த்தி சிதம்பரத்திடம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியிருந்தது.

இதனையடுத்து,விசா முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினார்.இதனையடுத்து,சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கப்பட்டது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இதனிடையே,காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 30 ஆம் தேதி வரை தடை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனைத் தொடர்ந்து,காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் இன்றும் விசாரணை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,சிபிஐ பொய் வழக்கு தொடர்ந்திருப்பதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில்,”மத்திய பாஜக அரசுக்கு எதிரான எனது குரலை ஒடுக்க வேண்டும் என்பதற்காக சிபிஐ அதிகாரிகளால் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் எனது செயல்பாடுகளை தடுக்க சிபிஐ நினைப்பது ஜனநாயக மாண்புகள் மீதான தாக்குதல் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.மேலும்,அக்கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தான் எழுதி  வைத்திருந்த குறிப்புகள் அடங்கிய பொருட்களுக்கும் சிபிஐ சீல் வைத்துள்ளது என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து,தற்போது மீண்டும் விசா ஊழல் வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சிபிஐ தலைமை அலுவலகம் சென்றார்.அப்போது,”என்னை அழைப்பது அவர்களின் பாக்கியம்,செல்வது எனது கடமை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Comment