#Breaking:தமிழகத்தில் சொத்து வரி 150% வரை உயர்வு – அரசு உத்தரவு!

தமிழகத்தில் மாநகராட்சிகள்,நகராட்சிகள்,பேரூராட்சிகளில் உள்ள சொத்து வரி 25% முதல் 150% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15 ஆவது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023 ஆம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021 – 2022 ஆம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும், மற்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்துள்ளது.

சொத்து வரி பொது சீராய்வு:

அதனடிப்படையில்,பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான பகுதியில் (Core city) 1998ஆம் ஆண்டிலும், பெருநகர சென்னை மாநகராட்சியுடன் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர நகர்ப்புர உள்ளாட்சிகளில் 2008ஆம் ஆண்டிலும், சொத்து வரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டது.

வழிகாட்டு குழு:

அந்த வகையில்,கடந்த ஜூலை 2013ஆம் ஆண்டு, சொத்து வரி பொது சீராய்வு மேற்கொள்வது தொடர்பாக, அரசாணை வெளியிடப்பட்டு, பின்னர் நவம்பர் 2019 ஆம் ஆண்டில் நிறுத்தி வைக்கப்பட்டு சொத்து வரி சீராய்வு மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்க குழுவும் அமைக்கப்பட்டது.

பல மடங்கு உயர்வு:

மேலும்,சொத்து வரியில் பல ஆண்டுகளாக எந்த உயர்வும் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில் சொந்த வருவாயின் பங்கு பெருமளவு குறைந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

சொத்து வரி 25% முதல் 150% வரை உயர்வு:

இந்நிலையில்,மேற்கண்ட குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி 25% முதல் 150% வரை உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி,

  • 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.
  • 601 முதல் 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.
  • 1201 முதல் 1800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.
  • 1800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதம் சொத்துவரி உயர்வு செய்யப்படவுள்ளது.
  • தற்போது உள்ள சொத்து வரியில்,வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும்,தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்படுகிறது.

சென்னை:

  • அதேபோன்று,சென்னையின் பிரதான நகரப் பகுதியில் 600 சதுர அடிக்கு குறைவாக உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம் உயர்வு.
  • சென்னையோடு 2011-ல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் 25 சதவீதம் மேலும்,சென்னையின் பிரதான நகரப் பகுதிகளில் உள்ள 600-1200 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புக்கட்டடங்களுக்கு 75 சதவீதம்,1201-1800 சதுர பரப்பளவுள்ள குடியிருப்புகட்டடங்களுக்கு 100 சதவீதம், 1801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கான சொத்து வரி 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • சென்னையின் பிரதான நகரப் பகுதிகளில் வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 150 சதவீதமும்,தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டடங்களுக்கு 100 சதவீதமும்,சென்னையோடு 2011-ல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதம், தொழில் மற்றும் கல்வி நிலையங்களுக்கு 75 சதவீதம், சொத்து வரி உயர்வு.

4 வகைகளாக பிரித்து நிர்ணயம்:

இதற்கு முந்தைய சொத்து வரி சீராய்வுகளின் போது, குடியிருப்புகளின் பரப்பளவிற்கு ஏற்றவாறு தனித்தனியாக பிரித்து சொத்து வரி சீராய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால் தற்போதைய சீராய்வு அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாக பிரித்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,பெரும்பாலான மக்கள் 1200 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவுள்ள வீடுகளில் வசிப்பாதல் இந்த வரி உயர்வு பெருமளவு பாதிப்பினை ஏற்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.