அதிமுக பொதுக்குழு தொடர்பாக டிச.6ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது இருதரப்பு வாதங்களை கூற நீதிபதிகள் உத்தரவு.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நவம்பர் 30-ஆம் தேதி விசாரணை நடைபெறாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிச்சயம் டிசம்பர் 6ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 6-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது ஓபிஎஸ் மற்றும் இபிஸ் ஆகிய இருதரப்பு வாதங்களை கூற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே, அதிமுக பொதுக்குழு வழக்கை டிசம்பர் 13-க்கு ஒத்திவைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம். இதுபோன்று, டிசம்பர் 6-ஆம் தேதிக்கு முன்னரே விசாரிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.