#Breaking:ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அசத்தல் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.அதன்படி,சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில்,சென்னையில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில்:

“நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் மறுவாழ்வுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திட்டம் குறித்து அறிவித்ததன்படி, சென்னையில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை என புதிதாக மொத்தம் 200 மருத்துவமனைகள் அமைக்கப்படும்.இதன் மூலம் பெரிய மருத்துவமனைகளில் மக்கள் அதிகளவில் வருவதை தவிர்க்க முடியும்”,என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,தஞ்சாவூரின் திருக்காட்டுப்பள்ளியில் புதிதாக பிரேத பரிசோதனைக் கூடம் இந்த ஆண்டுக்குள் அமைக்கப்படும் எனவும்,கடலூரில் ஆரம்ப சுகாதார மையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே,தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவுகளை தொடங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும்,எதிர்காலத்தில் அரசு கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு தொடங்க ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.மேலும்,இன்றுடன் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நிறைவு பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.