#Breaking:முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் வழக்கு – நாளை ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கை நாளை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அச்சமயத்தில்,சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி,அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து,முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.இதனைத் தொடர்ந்து,கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,நள்ளிரவில் ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அதன்பின்னர்,மார்ச் 7 ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளிகிருஷ்ணன் அவர்கள் உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து,அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,திமுக நிர்வாகியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கை நாளை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,ஜெயக்குமார் அவர்கள் தாக்கல் செய்த மனுவின் நகலை காவல்துறை தரப்பிற்கு வழங்கவும், விளக்கம் அளிக்கவும் அவகாசம் வழங்கி வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.