#BREAKING: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோளா நோய்த் தொற்று பரவலைக் குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை 31-7-2021 வரை நொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-1-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 12ம் தேதி முதல் 19ம் தேதி காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே அமலில் இருக்கும் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 12ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதில், தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மற்ற மாநிலங்களுக்கு இடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடரும் என்றும் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான தடை நீடிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசியல் கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது. பள்ளி, கல்லூரிகள், உயிரியியல் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், மதுக்கூடங்கள் திறக்க தடை தொடர்கிறது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர், இறுதி சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது.

இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், உணவகம், பேக்கரி, தேநீர் கடைகள் இரவு 9 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு பணிகளுக்கான எழுத்து தேர்வுகளை, மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று அறிகுறி தென்பட்டவுடன் அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு, நடவடிக்கை தொடரும்.

நோய் கட்டுப்பாடு பகுதிகளில் குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு, வீடாக கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கு தொடர்ந்து அனுமதி எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்