அதிமுக அணிகள் இணைய கோயில் கோயிலாய் போய் வேண்டுதல் செய்யும் ஒபிஎஸ் அணி…!

ஷீரடி: அதிமுக அணிகள் இணைய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஷீரடி சாய்பாபா மற்றும் சிக்னாபூர் சனீஸ்வரன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார்.
அதிமுக இரு அணிகளும் இணைப்பு உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தமிழ்நாட்டில் பரபரப்பை கிளம்பியுள்ளன. டிடிவி தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் என்று பல அணிகள் அதிமுகவில் இயங்கிவருவதால் அக்கட்சி தொண்டர்கள் தினமும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
யார்தான் உண்மையான தலைமை என்பதில் நீடிக்கும் குழப்பத்தால், அரசு மற்றும் அதிமுக கட்சிக்குள் மந்த நிலை நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் அப்படியே நீடிக்கின்றன.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். டெல்லி சென்ற அவர், பிரதமர் மோடியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த சந்திப்பு நடைபெறவில்லை.
இதனிடையே, டெல்லியில் இருந்து மும்பைக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றார். அவருடன் மைத்ரேயன் உள்ளிட்டோரும் சென்று சாய்பாபாவை தரிசனம் செய்தனர்.
பின்னர் அங்கே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், அதிமுக அணிகள் இணைப்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். மேலும் அவர், ‘தமிழக மக்கள் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்தேன்’ என்று தெரிவித்தார். முன்னதாக அவர் சிக்னாபூர் சனீஸ்வரன் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.
author avatar
Castro Murugan

Leave a Comment