#BREAKING: புதுச்சேரியில் ரங்கசாமி முதல்வராக பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவு..!

புதுச்சேரி முதல்வராக என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. திமுக மற்றும் சுயேட்சைகள் தலா 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். புதுச்சேரியில் ஆட்சியமைக்க 16 இடங்கள் தேவை என்ற நிலையில், என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதனால், யார் தலைமையில் புதுச்சேரியில் ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறுகையில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் சேர்ந்து முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் புதிய அரசில் பாஜக இடம்பெறும் என தெரிவித்து இருந்தார்.

இதற்கு முன் என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அமைக்கும்போது ரங்கசாமி தரப்பில் நான்தான் முதல்வர் வேட்பாளர் என கூறினார். ஆனால், பாஜக தரப்பில் தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யகூடிய எம்எல்ஏக்கள் தான் யார் முதல்வர் என்று முடிவு செய்வார்கள் என கூறினர். இதனால், புதுச்சேரியில் முதல்வராக தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படும் என கூறப்ப்பட்டது.

இதற்கிடையில், இன்று பிற்பகல் என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  அப்போது என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார்.

சட்டமன்ற குழு தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் பாஜகவும் ரங்கசாமி முதல்வராக ஆதரவு தெரிவித்தனர். ஆளுநரை சந்தித்து தங்களது ஆதரவு கடிதத்தை பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்தனர். இறுதியாக புதுச்சேரி முதல்வராக என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், புதுச்சேரி ஆளுநரை சந்தித்து  ரங்கசாமி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

author avatar
murugan