திரிபுரா சட்டப்பேரவை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ ரத்தன் சக்கரவர்த்தி பொறுப்பேற்பு..!

திரிபுரா சபாநாயகராக பாஜக எம்எல்ஏ ரத்தன் சக்கரவர்த்தி இன்று பதவியேற்றுக்கொண்டார்.

திரிபுரா சபாநாயகர் ரேபாதி மோகன் தாஸ் தனது பதவியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார்.இதனால்,எம்எல்ஏக்கள் அருண் சந்திர பௌமிக், திலீப் தாஸ் மற்றும் துணை சபாநாயகர் பிஸ்வபந்து சென் போன்றவர்கள் சபாநாயகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது.

ஆனால் கட்சித் தலைமை இறுதியாக மூத்த எம்எல்ஏ ரத்தன் சக்கரவர்த்திக்கு ஆதரவாக முடிவெடுத்தது.இதனையடுத்து,சக்கரவர்த்தி இந்த பதவிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.கடைசி நாளான்றும்கூட வேறு எந்த வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால்,ரத்தன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில்,மாநில சட்டசபையின் புதிய சபாநாயகராக ரத்தன் சக்கரவர்த்தி இன்று பதவியேற்றுக்கொண்டார்.

2017 ல் பிஜேபி-யில் இணைந்த சக்கரவர்த்தி 2018 தேர்தலில் காயர்பூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் (1988-1993) முன்னாள் அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2023 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக அரசு மற்றும் கட்சி அமைப்பு இரண்டையும் சீரமைக்கும் பாஜக மத்திய தலைமையின் முடிவின் ஒரு பகுதியாக இத்தகைய மாற்றங்கள் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.