தடையை மீறி விநாயகர் சிலை தூக்கி சென்ற பா.ஜ.கவினர் மறியல்!

சென்னையில் தடையை மீறி விநாயகர் சிலையை வாகனத்தில் ஏற்றி ஊர்வலம் சென்ற பாஜக வினரை போலீசார் மறித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகம் முழுவதும் அதிக அளவில் பரவி வருவதால் இன்று கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி அமைதியான முறையிலும், எளிமையான முறையிலும் கொண்டாடப்பட வேண்டும் என முதல்வர் முன்னதாகவே தெரிவித்திருந்தார். ஊர்வலமாக விநாயகர் சிலைகளை கொண்டு செல்வதோ அல்லது ஆற்றில் கரைக்கவோ யாருக்கும் அனுமதி இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை வேளச்சேரி பிரதான சாலை முதல் 100 அடி வரை உள்ள சாலையில் விநாயகர் சிலையை ஜீப்பின் முகப்பில் வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக இளைஞர் அணியினர் ஊர்வலமாக எடுத்து கொண்டு வந்து ஏரியில் கரைத்துள்ளனர்.
பின்னர் இதனை அறிந்து அங்கு வந்த காவல்துறை ஆணையர் விக்ரமன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உயர் நீதிமன்ற உத்தரவை மீறி விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு வந்துள்ளீர்கள், இது சட்டப்படி தவறு என இளைஞர் அணியை சேர்ந்த செல்லபாண்டியன் உள்ளிட்டோரிடம் கூறியுள்ளார். மேலும் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வந்ததற்காக கைது செய்யப் போகிறோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பின்பு உயர் அதிகாரிகளிடம் பேசிய காவல் ஆணையர், உங்களை கைது செய்யப்போவதில்லை அமைதியாக கலைந்து செல்லுங்கள் என கூறி அனுப்பி வைத்துள்ளார். அனுமதி இல்லாமல் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து சென்றதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
author avatar
Rebekal