பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா ..6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வி..!

இன்று பெங்களூருவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்த இந்திய அணி இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து  160 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக  ஷ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களும்,  அக்சர் படேல் 31 ரன்களும் , ஜிதேஷ் சர்மா 24 ரன்களும்  எடுத்தனர்.  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 10 ரன்களிலும், ரிங்கு சிங் 6 ரன்களிலும், கேப்டன் சூரியகுமார்  யாதவ் 5 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர். ஆஸ்திரேலிய அணியில் பென் ட்வார்ஷூயிஸ், ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் தலா 2 விக்கெட்டையும், ஆரோன் ஹார்டி, நாதன் எல்லிஸ், தன்வீர் சங்கா தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

161 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி  20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய அணியில் பென் மெக்டர்மோட் 54 ரன்களும், டிராவிஸ் ஹெட் 28  ரன்களும், கேப்டன் மேத்யூ வேட் 22 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்திய அணியில்  முகேஷ் குமார் 3 விக்கெட்டையும்,  ரவி பிஷ்னோய் , அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டையும் ,  அக்சர் படேல்  1 விக்கெட்டை பறித்தனர். சுழல் பந்துவீச்சார்கள் ரவி பிஷ்னோய், அக்சர் படேல் சிறப்பாக பந்து வீசினர். அதிலும் குறிப்பாக அக்சர் படேல் 4 ஓவரில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை பறித்தார். ரவி பிஷ்னோய்  4 ஓவரில் 29 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட் பறித்தார்.

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஆஸ்திரேலிய அணி மூன்றாவது போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. மீதமுள்ள நான்கு போட்டியிலும்  இந்திய அணி வெற்றி பெற்றது.

author avatar
murugan