பதற்றத்தின் உச்சத்தில் ஏமன்… மீண்டும் தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்கா!

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு முதல் பல மாதங்களாகவே போர் நடைபெற்று வருகிறது. இதில், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். இதன் எதிரொலியாக மத்திய கிழக்கின் செங்கடல் பகுதி வழியாக செல்லும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும், ஈரான் நாடு, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கி வருவதால் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை விடுத்த நிலையிலும், சரக்கு கப்பல் மீது தாக்குதல்  நடத்தியுள்ளனர். இது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் கோபத்தை தூண்டியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று அதிகாலையில் ஏமன் நாட்டின் மீது அமெரிக்க, இங்கிலாந்து ராணுவங்கள் வான்வழி தாக்குதலை தொடங்கின. ஏமனில் அல் ஷதைதா, சத்தா, தாமர், சனா ஆகிய முக்கிய நகரங்களின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தினர்.  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தும் 10-க்கும் மேற்பட்ட ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்ட தளங்கள் மீது போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

அதிக விலை கொடுக்க தயாராகுங்கள்.. அமெரிக்கா, பிரிட்டனுக்கு ஹவுதி அமைப்பு கடும் எச்சரிக்கை!

அதுமட்டுமில்லாமல், போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் மூலமாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்கல் நடந்தது. தேவைப்பட்டால் தாக்குதலை தீவிரப்படுத்துவோம் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்தார். இந்த தாக்குதலை தொடர்ந்து, அமெரிக்காவும், பிரிட்டனும் அதிக விலை கொடுக்கத் தயாராக வேண்டும் என ஹவுதி அமைப்பின் துணை வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அல்-எஸி எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த பரபரப்பான சூழலில், ஏமன் நாட்டு மக்கள் பெரும் பதற்றத்துடனும், அச்சத்துடனும் உள்ளனர்.

இந்த நிலையில், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இருக்கும் இடங்களில் அமெரிக்க படைகள் இரண்டாவது சுற்று வான்வெளி தாக்குதல் நடத்தி வருவதாக ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஏமனில் ரேடார் வசதியை அமெரிக்கப் படைகள் குண்டுவீசித் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

அமெரிக்க-பிரிட்டிஷ்  தாக்குதலில் 28 இடங்களில் 60 இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ஏமன் துறைமுகமான ஏடனில் இருந்து தென்கிழக்கே 90 கடல் மைல் தொலைவில் உள்ள கப்பலில் இருந்து 500 மீட்டர் (1,600 அடி) கடலில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏமனில் மீண்டும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்