அதிக விலை கொடுக்க தயாராகுங்கள்.. அமெரிக்கா, பிரிட்டனுக்கு ஹவுதி அமைப்பு கடும் எச்சரிக்கை!

கடந்தாண்டு செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது ஈரானிய ஆதரவுடன் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது. இதனால், செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஏமனில் அல் ஷதைதா, சத்தா, தாமர், சனா ஆகிய முக்கிய நகரங்களின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் நேற்று வான்வழி தாக்குதல்நடத்தினர். இதில்,குறிப்பாக ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து தாக்குதல்.!

முதல்முறையாக அமெரிக்காவும், பிரிட்டனும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளன. தேவைப்பட்டால் தாக்குதலை தீவிரப்படுத்துவோம் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்தார். ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து நடத்திய தாக்குதலால் செங்கடலில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கு செல்லும் அத்தனை கப்பல்களும் தாக்கப்படும் என ஹவுதி அமைப்பு எச்சரித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து ஏமன் தலைநகர் சானா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள ஹவுதி அமைப்பினரின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய நிலையில், ஹவுதி அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஹவுதி அமைப்பின் துணை வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அல்-எஸி கூறியதாவது, அமெரிக்க, பிரிட்டிஷ் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் நமது நாடு மிகப்பெரும் ஆக்கிரமிப்பு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தலைநகர் சனா, ஹொடைடா மற்றும் சாதா நகரங்களில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

இதற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் அதிக விலை கொடுக்கத் தயாராக வேண்டும் என்றுள்ளார். இதனிடையே,  இஸ்ரேலுக்கு எதிராக காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களை பாதுகாப்பதற்காக ஹவுதி அமைப்பு தாக்குதல் நடத்தியதாக கூறினாலும், செங்கக்கடல் பகுதியில் ஹவுதி அமைப்புகளால் தாக்கப்பட்ட பல கப்பல்கள் இஸ்ரேலுடன் தொடர்புடையவை அல்ல எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்