ஆசிய விளையாட்டு போட்டி.! தங்கம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி!

ஆசிய விளையாட்டு ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் ருத்ராஜ் தலைமையிலான இந்திய அணி தங்கம் பதக்கம் வென்றுள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஆசிய விளையாட்டு தொடரில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

அதன்படி, நேரடியாக காலியிறுதிக்கு தகுதி பெற்ற ருத்ராஜ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி,  20 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளம் அணியை தோற்கடித்தது. இதன் மூலம் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. இதையடுத்து, வங்கதேச அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

அதன்படி, இன்று சீனாவில் பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. இதில், இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆப்கானிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர் மழையால் ஆப்கானிஸ்தான் அணியுடனான டி20 கிரிக்கெட் இறுதி போட்டி பாதியிலேயே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. சர்வதேச தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணியை விட முன்னிலையில் இருப்பதால், இந்திய தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.  ஆப்கானிஸ்தான் அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.

ஏற்கனவே, டி20 கிரிக்கெட்டில் இந்திய மகளிர் கிர்க்கெட் அணி தங்கம் வென்றிருந்த நிலையில், தற்போது ஆடவர் கிரிக்கெட் அணியும் தங்கம் வென்றுள்ளது. அதுமட்டுமில்லாமல், சீனாவின் ஹாங்ஷௌ நகரில் நடைபெற்று வரும் 19-ஆவது ஆசியப் போட்டிகளின் வரலாற்றில் முதல்முறையாக இந்தியா 100 பதக்கங்களை கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்