இதே விஷயத்தை காங்கிரஸ் செய்தால் பாஜகவினர் கூச்சலிட்டிருப்பார்கள்.. அசோக் கெலாட் விமர்சனம்.!

5 மாநில தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் கடந்த ஞாயிற்று கிழமையே வெளியாகிவிட்டது. அதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்டு மாநில முதல்வராக பதவி ஏற்றுவிட்டார். மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்று லால்டுஹோமா முதலமைச்சராக பொறுப்பேற்று விட்டார்.

ஆனால் 3 மாநில ஆட்சியை பிடித்த பாஜக இன்னும் முதல்வரை நியமித்து ஆட்சியமைக்காமல் இருந்து வருகிறது. போட்டியிட்ட அனைத்து மாநிலங்களிலும் பிரதமர் மோடியின் புகைப்படத்தையும், பாஜக தேர்தல் வாக்குறுதிகளையும் வைத்து பொதுவான வாக்கு சேகரிப்பில் தான் பாஜக வேட்பாளர்கள் ஈடுபட்டனர். இதனால் மாநில முதல்வர் வேட்பாளர் யார் என அப்போதே குழப்பம் ஏற்பட்டது. அந்த குழப்பம் தற்போது வரை தொடர்கிறது. நேற்று தான் 3 மாநிலத்திற்கும் முதல்வர்களை தேர்ந்தெடுக்கும் உயர்மட்ட குழுவை பாஜக தலைமை அமைத்தது.

3 மாநில முதல்வர்கள் யார்.? மேலிட பொறுப்பாளர்களை நியமித்த பாஜக.!

இது குறித்து ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் விமர்சித்துள்ளது . தேர்தல் முடிவுகள் வெளியாகி 7 நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் பாஜக முதலமைச்சர்கள் யார் என அறிவிக்காமல் இருந்து வருகிறது. இதே விஷயத்தை காங்கிரஸ் செய்து இருந்தால் என்னென்ன சொல்லி இருப்பார்கள்.  என்பது தெரியும். அவர்கள் அமைக்கும் புதிய அரசாங்கத்திற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம் என கெலாட் தெரிவித்தார் .

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, வித்யாதர் நகரில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தியா குமாரி, திஜாரா தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற மஹத் பாலக் நாத்; மற்றும் ஜோத்வாரா தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற ராஜ்யவரதன் சிங் ரத்தோர் ஆகியோர் முதல்வர் போட்டியில் முன்னணியில் உள்ளனர். இதில் வசுந்தரா ராஜே முன்னதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உடன் ஆலோசனை நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாநில முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் உயர்மட்ட குழுவில் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே மற்றும் ராஜ்யசபா எம்.பி சரோஜ் பாண்டே ஆகியோர் பாஜக தலைமையால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.