ED காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு

Arvind Kejriwal: அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தகவல்

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவால் கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டார். முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, எம்பி சஞ்சய் சிங், தெலங்கானா எம்எல்சி கவிதா உள்ளிட்டோரும் இவ்வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 28ஆம் தேதி வரையில் அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் 55 வயதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

அவர் உடலில் ரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, கெஜ்ரிவாலின் இரத்த சர்க்கரை அளவு ஒரு கட்டத்தில் 46 mg/dL ஆகக் குறைந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, தனது கணவரை சந்தித்த பின்னர் அளித்த பேட்டியில், கெஜ்ரிவாலின் ரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுவதாக கவலை தெரிவித்தார். மேலும் அவரது மன உறுதி வலுவானது எனவும் கெஜ்ரிவால் உடல்நிலைக்காக மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.