நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும் வழக்கத்தை விட வேண்டும் – கமல்ஹாசன்

நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும், தன் வழக்கத்தை விட வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,பள்ளிகள் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலன்கருதி பல பள்ளி நிர்வாகம், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இதனோடு மட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களும் தாங்கள் பெற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள்  என்று அரசு அறிவித்தது.

இதனிடையே ஜூலை 13-ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று முன்தினம் கூறினார். தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும்.மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாகவும் கூறினார்.

இதன் பின்னர் நேற்று தமிழகத்தில் ஆன்-லைன் வழி கல்வி இல்லை – டிவி மூலம் பாடம் கற்பிக்க திட்டம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.அமைச்சர் இவ்வாறு கூறியது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், கல்வி, சராசரி குடும்பத்தின் எதிர்காலக் கனவு. எதிர்காலம் சிறக்க நம்பியிருக்கும் ஏணி. அரசு இதில் நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும், தன் வழக்கத்தை விடுத்து தீர ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.