ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு.! அரசியல் கட்சியினர் அதிர்ச்சி..!

Election2024: கேரளாவில் மாதிரி வாக்குபதிவின்போது மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஒட்டுகள் விழுந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாளை முதல் தொடங்க உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் உள்ள 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை தொடங்கும் மக்களவை தேர்தல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

அதே போல கேரளாவில், வரும் ஏப்ரல் 22ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குபதிவின் போது மொத்தமுள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற  உள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலம் காசர்கோடு தொகுதியில் நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை சோதிக்கும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் குறைந்தது நன்கு மின்னணு வாக்கு இயந்திரத்தில் (EVM) பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் விழுவதாக கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள் கூட்டணி (LDF) மற்றும் காங்கிரஸ் கூட்டணி (UDF) வேட்பாளர்களின் முகவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த நான்கு மின்னணு வாக்கு இயந்திரத்தில் பாஜகவின் தாமரை சின்னத்தில் ஒரு முறை அழுத்தினால் 2 ஓட்டுகள் விழுந்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.

அதாவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கும்போது ஒரு வாக்கு பாஜகவுக்கு கூடுதலாக விழுந்திருக்கிறது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள மற்ற சின்னங்களை விட காங்கிரஸின் ‘கை’ சின்னம் சிறியதாக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

எனவே பாஜகவுக்கு கூடுதல் ஓட்டு விழும் விவகாரம் தொடர்பாக காசர்கோடு மக்களவைத் தொகுதியின் எல்.டி.எஃப் வேட்பாளரும், சி.பி.எம் தலைவருமான எம்.வி.பாலகிருஷ்ணன், தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் இன்பசேகரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதனிடையே, மின்னணு வாக்கு இயந்திரத்தில் நம்பகத்தன்மை இல்லை என்று கூறி மின்னணு வாக்கு இயந்திரத்துடன் இணைந்து விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டை 100 சதவிகிதம் எண்ணக் கோரிய வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா , தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கியுள்ள அமர்வு முன்னர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இன்று மீண்டும் அதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்தபோது, காசர்கோட்டில் பாஜகவுக்கு கூடுதல் ஓட்டு விழுந்த விவகாரம் குறித்து மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதன்பின் காசர்கோடு விவகாரத்தை விசாரித்து விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரத்துடன் இணைந்து விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டை 100 சதவிகிதம் எண்ணக் கோரிய வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்