ஜனவரி 10 ஆம் தேதி வரை…1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு – வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றும் வேகமாகப் பரவி வருகிறது.இதன்காரணமாக,இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,மருத்துவ நிபுணர்கள் மற்றும் முக்கிய துறைகளின் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில்,தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி,ஜனவரி 10-ஆம் தேதி வரை

  • மழலையர்,விளையாட்டு பள்ளிகள் மற்றும் நர்சிங் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.
  • தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை.
  • எனினும்,9 முதல் 12-ஆம் வகுப்பு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.