முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது!

கொரோனா தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. இந்தக் ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பில் டிஆர் பாலு, ஆர்எஸ் பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், வேடசந்தூர் பரமசிவம், காங்கிரஸ் சார்பில் விஜயதரணி, முனிரத்தினம், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், விசிக சார்பில் சிந்தனை செல்வன், பாலாஜி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ராமசந்திரன், மாரிமுத்து, மதிமுக சார்பில் சின்னப்பா, பூமிநாதன், மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் சின்னத்துரை, நாகை மாலி, கொமதே கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை சார்பில் வேல்முருகன், மமக சார்பில் ஜவாஹிருல்லா, புரட்சி பாரதம் கட்சி சார்பில் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக, ஒவ்வொரு கட்சியில் இருந்தும் சுமார் 2 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ள தமிழக அரசு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில்,கொரோனா பரவல் அதிகரிப்பதைக் கட்டுபடுத்த தமிழக அரசு செய்து வரும் பணிகள் மற்றும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து அலோசனை நடைபெற்று வருகிறது.

அப்போது பேசிய முதலமைச்சர், கொரோனா தடுப்பில் தமிழக அரசின் பணியில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படுகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற காப்பீடு மூலம் அரசே செலவை ஏற்கும். இரவு பகல் பாராமல் கொரோனா தடுப்பு பணிகளுக்கு கட்டளை மையம் தொடங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

மேலும், தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்த்து இறக்குமதி செய்ய உலகளாவிய ஒப்பந்தம் புள்ளி கோரப்பட உள்ளது என்றும் ஒடிசா, மேற்குவங்கத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்தின் தேவை கருது சென்னை மட்டுமின்றி பிற நகரங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. சிங்கப்பூர், தைவான் நாடுகளில் இருந்து ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் வரவழைக்க படுகிறது என்றும் ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றி வருகிறார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்