கொரோனா பரவல் எதிரொலி;சென்னையில் ஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்..!

கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக சென்னையில் ஆம்புலன்ஸ் வாகனங்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,கார்கள் ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையானது மிகத் தீவிரமாக பரவி வருகிறது.குறிப்பாக,சென்னையில் நேற்று ஒரே நாளில் 7,564 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதனால்,சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,12,505 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில்,சென்னையில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன.இதன்காரணமாக,ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொரோனா நோயாளிகளை வைத்துக்கொண்டு மருத்துவமனை வாசலிலேயே வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு காத்திருக்கும் சூழலில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைத்தே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.இதனால்,அவசர உதவிக்கு செல்ல முடியாமல் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

இந்த நிலையில்,தமிழக சுதந்திர வாடகை வாகன சங்கத்தினர்,கொரோனா நோயாளிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்குவதற்காக தங்களது கார்களை(கால் டாக்ஸிகள்) ஆம்புலன்ஸ்களாக மாற்றி வருகின்றனர்.

அதன் முதற்கட்டமாக,கோவிட் ரிலீஃப் ஃபோர்ஸ் மற்றும் ஸ்வோட் ஆகிய இரு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இணைந்து தற்போது இரண்டு கார்களை மட்டுமே ஆம்புலன்ஸ்களாக மாற்றியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய தமிழக சுதந்திர வாடகை வாகன சங்கத்தினர்,இன்னோவா,டெம்போ டிராவல்லர்,டவேரா மற்றும் ஷைலோ உள்ளிட்ட பெரிய வாகனங்களை ஆக்சிஜன் மற்றும் ஸ்ட்ரெச்சர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்களாக மாற்ற ஒரு வாகனத்திற்கு சுமார் ரூ.40,000 ஆகும்.எனவே,இந்த தொகையை அரசு கொடுக்க முன்வந்தால் தமிழகம் முழுவதும் 1300 கார்கள் ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டு உடனே அவசர உதவிக்கு பயன்படுத்தபடும்”,என்று கூறியுள்ளனர்.