அதிமுக அரசு ஆண்மையான அரசு , அது அவருக்குத்தான் பொருந்தும் – ஹெச். ராஜா கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

ஹெச்.ராஜா சொன்ன சொற்கள், அவருக்குத்தான் பொருந்தும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும், நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில்  இன்று மீண்டும் பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறுகையில் ,விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணி நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும்.மேலும் விநாயகர் சிலை வைத்து வழிபட மகாராஷ்டிரா மற்றும்  கர்நாடகாவில் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.ஆனால்  தமிழக அரசு மட்டும் அனுமதி கொடுக்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார் .

இதற்குஇடையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்,கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு என்று பதிவிட்டார்.இவரது கருத்துக்கு அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.அதாவது,  நீதிமன்றத்தை பழித்துப்பேசி பின் அட்மின் தவறென்று பதுங்கிய போதே உங்கள் ஆண்மை தெரியும் எங்களுக்கு, மக்கள் பணியை மகேசன் பணியாக ஆற்றும் அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை, சுயேச்சையாக 999 ஓட்டுக்கு மேல் வாங்கி மக்களிடத்தில், உங்கள் அரசியல் ஆண்மையே நிரூபியுங்களேன் ஹெச்.ராஜா என்று பதிவிட்டார்.இதனால் அதிமுக-பாஜக இடையே இணையத்தில் வார்த்தை போர் அதிகரித்தது.

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,  அதிமுக அரசு ஆண்மையான அரசு. ஹெச்.ராஜா சொன்ன சொற்கள், அவருக்குத்தான் பொருந்தும்.ஒரு ட்விட்டர் பதிவை போட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொண்டவர் ஹெச்.ராஜா .வரலாறு தெரியாமல் இன்றைய தலைமுறையை ஏமாற்றி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.