இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு -முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு

இன்று அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறுகிறது. 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன.ஆகவே தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக ,திமுக ,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.இந்த பிரச்சாரங்களுக்கு மத்தியில் அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

ஆனால் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க இழுபறி நீண்ட நாட்களாக ஏற்பட்டு வந்த நிலையில்,பழனிசாமியை அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தான் இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு.இது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 9-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தனர்.இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.