“இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆட வேண்டும்”- ஜடேஜா அட்வைஸ்!

டெஸ்ட் தொடரின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கவுள்ள நிலையில், நாம் சிறந்த ஸ்கோரை எதிர்பார்க்க வேண்டுமானால், அதற்கு அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடவேண்டும் என ஜடேஜா தெரிவித்துள்ளார்.

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி, கடந்த 7 ஆம் தேதி சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் எடுத்தனர்.

அதன்பின் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக சுப்மான் கில், ரோஹித் சர்மா இருவரும் இறங்கினர். நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா 26 ரன்கள் எடுக்க, விக்கெட்டை இழந்தார். பின் புஜாரா களமிறங்க, அரைசதம் அடித்த சுப்மான் கில் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 45 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 96 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் புஜாரா 9*, ரகானே 5* ரன்களுடன் உள்ளனர்.

இந்தநிலையில் ஜடேஜா, இன்றைய போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நாம் சிறந்த ஸ்கோரை எதிர்பார்க்க வேண்டுமானால், அதற்கு அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடி, ரன்களை குவிக்க வேண்டும். இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தி போட்டியை மேலும் எடுத்துச் செல்வதற்கு ஒரு பேட்ஸ்மேன் அல்ல, ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் தங்களின் பங்களிப்பை கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த ஜடேஜா, பொறுப்புடன் விளையாடினால் எளிதாக ரன்கள் உயரும் என தெரிவித்துள்ளார்.