பக்தி மயமான அதிமுக… பிரச்சாரம் முதல் வேட்புமனு தாக்கல் வரையில் நல்ல நேரம் தான்….

Election2024 : இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அதிமுக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.

வரும் மக்களவை தேர்தலை தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சியான அதிமுக இறைபக்தியுடன் எதிர்கொண்டு வருகிறது. ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கிய அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டத்தில் சென்றாய பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் .

வழக்கமாகவே தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கும் முன்னர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ளே சென்றாய பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதை பழக்கமாக கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, இந்த முறையும் அதனை தொடர்ந்தார். நேற்று சென்றாய பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் சேலம் அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து பிரச்சாரத்தை துவக்கினார்.

இன்னும் 3 தினங்களில் (மார்ச் 28) வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் நிறைவடைய உள்ள நிலையில், இன்று பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வேட்பாளர்களிடம் கூறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று பகல் 12 மணியளவில் நல்ல நேரம் என்பதால் வேட்பு மனுதாக்கல் செய்ய வேண்டும் என கூறியதாகவும், வேட்புமனு தாக்கல் விண்ணப்பத்தில் கூட பிரம்ம முகூர்த்த நேரத்தில் கையெழுத்திட வேண்டும் என இபிஎஸ் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் ஒரு தொகுதி , எஸ்டிபிஐ கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன. மீதம் உள்ள 33 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் முதற்கட்ட தேர்தல் தேதியான ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.