ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஆசுதோஷுக்கு டெல்லி நீதிமன்றம் அபராதம்!

ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஆசுதோஷுக்கு டெல்லி நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது.
கடந்த 2000 முதல் 2013-ம் ஆண்டு வரை டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக அருண் ஜேட்லி இருந்தார். அப்போது நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் குமார் விஷ்வாஸ், சஞ்சய் சிங், ராகவ் சதா, தீபக் பாஜ்பாய், ஆசுதோஷ் ஆகியோர் குற்றம் சாட்டினர்.
இதைத் தொடர்ந்து அர்விந்த் கேஜ்ரிவால், ஆசுதோஷ் உள்ளிட்டோரிடம் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு டெல்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜேட்லி ஆங்கிலத்தில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.
 
இந்நிலையில் அருண் ஜேட்லி இந்தியில் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று கோரி ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஆசுதோஷ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை மாஜிஸ்திரேட் தீபக் ஷெராவத் விசாரித்தார். அப்போது நீதிபதி கூறியதாவது: ஆசுதோஷ் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். ஆங்கில மொழியில் நூல் வெளியிட்டுள்ளார். பல்வேறு சேனல்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேட்டியளிக்கிறார். தற்போதைய மனுவும் ஆங்கிலத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஜேட்லியின் ஆங்கில வாக்குமூலம் புரியவில்லை என ஆசுதோஷ் மனு தாக்கல் செய்துள்ளார். எனவே அவருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
source: dinasuvadu.com

Leave a Comment