4 கண்கள்,2 வாய் மற்றும் 2 தலை கொண்ட கன்று;தெய்வீக அதிசயமாக கருதும் மக்கள்…!

  • உத்தரபிரதேசத்தின்,அரவிந்த் என்பவரின் வீட்டில் உள்ள ஒரு பசுவுக்கு 4 கண்கள்,2 வாய் மற்றும்  2 தலை கொண்ட ஒரு அரிய கன்று பிறந்த சம்பவம், அப்பகுதியினரிடையே ஒரு தெய்வீக அதிசயமாக கருதப்படுகிறது.

உத்தரபிரதேசத்தின்,சாண்டௌலி கிராமத்தில் வசிக்கும் அரவிந்த் என்பவரின் வீட்டில் உள்ள ஒரு பசு,அரிய கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அதாவது,அக்கன்றுக் குட்டிக்கு இரண்டு வாய்,இரண்டு காதுகள் மற்றும் நான்கு கண்கள் கொண்ட இரண்டு தலை உள்ளது.எனினும்,பசுவும், கன்றுவும் ஆரோக்கியமாக உள்ளன.

இதனால்,அரவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினர்கள்,இதனை இயற்கையின் அதிசயம் என்று கருதினாலும்,கிராமத்தில் உள்ள சிலர், அக்கன்றை ஒரு ‘தெய்வீக அதிசயமாக’ கருதுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து,இந்த செய்தி பரவிய பின்னர்,அருகிலுள்ள மாவட்டங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த அரிய நிகழ்வைக் காண ஆர்வத்துடன் திரண்டு செல்கின்றனர்.

மேலும் இதுகுறித்து சாண்டௌலி தலைமை கால்நடை மருத்துவர் டாக்டர் சத்ய பிரகாஷ் பாண்டே கூறுகையில்: “கரு வளர்ச்சியின் போது உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியால் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்கிறது.அதன்படி,கருப்பையில் கரு வளர்ச்சியின் போது,செல்கள் பல பகுதிகளாகப் பிரிகின்றன,இந்தச் செயல்பாட்டின் போது சில சமயங்களில் உயிரணுக்களின் கூடுதல் வளர்ச்சியும் இருக்கும்.இதனால்தான் இரண்டு தலைகள் உருவாகின்றன.எனவே,இது ஒரு தெய்வீக அதிசயம் அல்ல.”,என்று கூறினார்.