விளையாட்டிலும் பாரபட்சம்; இந்த ஓரவஞ்சனை நியாயமா? – மநீம

விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என மநீம அறிக்கை. 

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை நிதி ஒதுக்கியுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் 33 மாநிலங்களுக்கு 2754.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்க்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. குறிப்பாக, பாஜக ஆளும் குஜராத்துக்கு ரூ.608 கோடியும், அதைவிட பெரிய மாநிலமான தமிழகத்துக்கு ரூ.33 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது எவ்வகையிலும் நியாயமற்றது.

அண்மையில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில், கேலோ இந்தியா விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம், பீஹார், டெல்லி, ஹரியானா, இமாச்சல், கேரளா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களைவிட தமிழகத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, பயிற்சியாளர்களும் டெல்லிக்கு 121 பேர், அசாமுக்கு 56 பேரை பணியில் அமர்த்திவிட்டு, தமிழகத்துக்கு 18 பேரை மட்டும் பணியில் அமர்த்தியுள்ளனர்.

தமிழக வீரர்கள் சர்வதேச அளவில் சாதிக்கின்றனர். அவர்களை ஊக்குவிப்பதை விடுத்து, மாநிலத்துக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது நியாயமா? மத்திய அரசுக்கு அதிக வரி வசூலித்துத் தரவும், சர்வதேச ஒலிம்பியாட் போட்டி நடத்தவும் மட்டும் தமிழகம் வேண்டுமா? நிதி ஒதுக்குவதில் ஓரவஞ்சனைதானா?’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment