அமெரிக்கா:கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் 50 கோடி(500 மில்லியன்) பேருக்கு இலவசமாக கொரோனா விரைவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை தீவிரமாக பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக,கொரோனா தொற்றால் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து,கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு,மக்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில் அதிகப்படியான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.ஒரு வழியாக கொரோனா பரவல் முடிவுக்கு வரவுள்ளது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில்,தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து,தற்போது பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றானது வேகமாக பரவி வருகிறது.இது டெல்டா வகை கொரோனா மாறுபாட்டை விட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாது என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும்,முந்தைய கொரோனா வைரஸ் தொற்றை விட அதிகவேகமாக பரவி வருகிறது.இதன்காரணமாக, மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்க பல்வேறு நாடுகள் தயாராகி வருகின்றன.குறிப்பாக,பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையில்,”ஒரு புதிய புயல் வருவதை நாம் காணலாம்” என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவிற்கான பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் எச்சரித்துள்ளார்.
அதே சமயம்,அமெரிக்காவில் 1,500 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.எனினும்,தினசரி பாதிப்பு கடுமையான அளவு அதிகரித்து வருகிறது என்றும்,கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 73 சதவீதம் பேருக்கு ஒமிக்ரான் வகை தொற்று இருக்கலாம் எனவும் அமெரிக்க நோய் தடுப்பு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் 50 கோடி பேருக்கு இலவசமாக கொரோனா விரைவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.மேலும், கூடுதலாக 10 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
“வீட்டிலேயே ரேபிட் கொரோனா சோதனைகள் மேற்கொள்ள வசதியாக 50 கோடி (500 மில்லியன்) பரிசோதனை கிட்களை வாங்குகிறோம். விரும்பும் அமெரிக்கர்களுக்கு அவை இலவசமாக விநியோகிக்கப்படும்.
We’re purchasing 500 million at-home rapid COVID tests that will be distributed for free to Americans who want them. pic.twitter.com/m9rgb9kjmP
— President Biden (@POTUS) December 22, 2021
இந்த வார இறுதியில் விடுமுறையைப் பாதுகாப்பாகக் கொண்டாட முடியுமா என்று யோசிக்கும் அமெரிக்கர்களுக்கு:ஆம்,உங்களால் முடியும் என்பதே எனது பதில்.
ஆனால்,நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தடுப்பூசி போட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால்,நீங்கள் திட்டமிட்டபடி கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கொண்டாட முடியும்.
பூஸ்டர் தடுப்பூசிகள் ஒமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்குகின்றன.அதனால்தான் நான் எனது பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றேன்.மேலும் அவ்வாறு செய்யத் தகுதியுள்ள அனைவரையும் ஊக்குவிக்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.