நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரிகளாம் – ஓபிஎஸ் மீது ஜெயக்குமார் விமர்சனம்

அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் நியமித்தது தொடர்பாக கடுமையாக விமர்சித்தார்.

சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் பிறந்தநாநாளையொட்டி இன்று அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். அந்தவகையில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெயக்குமார், அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் நியமித்தது தொடர்பாக கடுமையாக விமர்சித்தார்.

அதாவது, நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரிகளாம். அதுபோன்று ஓபிஎஸ் -க்கு கட்சி இல்லை, கட்சியில் அவர் உறுப்பினரும் இல்லை. அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஓபிஎஸ் அமைப்பு செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரனை நியமிக்கிறார். கட்சியில் அடிப்படை உறுப்பினர் இல்லாத பன்னீர்செல்வம், எப்படி நிர்வாகிகளை நியமிக்க முடியும்?, இதனால் நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரிகளாம் என்பது தான் ஓபிஎஸ் -க்கு பொருந்தும் என விமர்சித்தார்.

அதிமுக அலுவலகம் சூறையாடம் தொடர்பாக காவல்துறை யார் வீட்டுக்கு சென்று இருக்க வேண்டும். அனைத்தும் பன்னீர்செல்வம் வீட்டில் தான் இருந்தது என்று ஜே.சி.டி.பிரபாகர் பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்கிறார். ஆனால், டம்மி பீஸாக உள்ள கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி வீட்டில் ஆவணங்களை கைப்பற்றுகின்றனர். ஓ.பன்னீர்செல்வமும், தி.மு.க. கைகோர்த்து உள்ளனர் என குற்றசாட்டினார்.

இதனிடையே பேசிய அவர், திராவிட மாடல் ஆட்சியில் தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் தலைவர்களின் சிலைக்கு உடனடியாக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் திமுக செய்து இருக்க வேண்டும். ஆனால் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லும் இவர்கள், சமூக நீதி என்று சொல்லும் இவர்களின் ஆட்சியில் தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் உள்ளது. திமுக மாவட்ட அமைப்புகளுக்கான மனு தாக்கலில் 700 பேர் கூட வரவில்லை. அதில் எத்தனை பேர் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் என்ற பட்டியலை சமூக நீதிப் பேசுபவர்கள் வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment