சென்னை சைதாப்பேட்டை ரேஷன் கடையில் 7.36 லட்சம் கொரோனா நிவாரண நிதி கொள்ளை

சென்னை சைதாப்பேட்டை காவேரி நகரில் அமைந்துள்ள ரேஷன் கடையில் 7.36 லட்சம் கொரோனா நிவாரண நிதிக் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி கைப்பற்றியது ,இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாள் முதலே மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் காணப்படும் நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மக்களுக்கு ஊரடங்கு நேரத்தில் பயன்படுவதற்காக முதல்வர் முன்னமே வாக்களித்தபடி தற்பொழுது நிவாரண நிதி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை காவேரி நகரில் அமைந்துள்ள ரேஷன் கடையில் கொரோனா நிவாரணத்திற்காக வழங்கப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அந்த ரேஷன் கடை சூப்பர்வைசர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

7.36 லட்சம் ரேஷன் கடையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நிவாரண நிதியை வாங்க வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், அவர்களுக்கான நிதியை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்காக கொடுக்கப்பட்டிருந்த கொரோனா நிவாரண நிதி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Rebekal