இந்தியாவில் அடுத்த ஆண்டு இந்த 13 நகரங்களில் 5ஜி சேவைகள்..!

இந்தியாவில் 13 நகரங்களில் முதற்கட்டமாக 5ஜி சேவைகள் 2022-ல் தொடங்கப்படும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொலைத்தொடர்புத் துறை கூறுகையில், உள்நாட்டு 5G சோதனை திட்டம் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சோதனை டிசம்பர் 31, 2021க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குருகிராம், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, சண்டிகர், டெல்லி, ஜாம்நகர், அகமதாபாத், சென்னை, ஹைதராபாத், லக்னோ, புனே மற்றும் காந்திநகர் ஆகிய இடங்களில் 5ஜி சோதனை மையங்களை அமைத்துள்ளனர். அடுத்த ஆண்டு இந்த பெருநகரங்கள் மற்றும் பெரிய நகரங்களில் 5G சேவைகள் முதலில் தொடங்கும்.

2002 மற்றும் 2014 க்கு இடையில் 62,386 கோடி ரூபாயாக இருந்த தொலைத்தொடர்பு துறையில் அன்னிய நேரடி முதலீடு 2014 மற்றும் 2021 க்கு இடையில் கிட்டத்தட்ட 150 சதவீதம் அதிகரித்து 1,55,353 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தொலைத்தொடர்புத் துறையின் நிதியுதவியுடன் கூடிய 5ஜி சோதனைத் திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி சோதனையில் ஐஐடி கல்லூரியின் பெரும் பங்களிப்பு:

தொலைத்தொடர்புத் துறை 5G தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் சோதனைகளுக்காக புகழ்பெற்ற கல்லூரி நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. உள்நாட்டு 5ஜி சோதனை திட்டத்தில் நாட்டின் எட்டு கல்லூரிகள் ஈடுபட்டுள்ளன. அதில் ஐஐடி பாம்பே, ஐஐடி-டெல்லி, ஐஐடி-ஹைதராபாத், ஐஐடி-மெட்ராஸ், ஐஐடி-கான்பூர், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் பெங்களூர் (ஐஐஎஸ்சி), சொசைட்டி ஃபார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அண்ட் ரிசர்ச் மற்றும் சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் வயர்லெஸ் தொழில்நுட்பம் (CEWiT) ஆகிய கல்லூரிகள் 36 மாதங்களாக சோதனை திட்டத்தில் உள்ளன.

2018ல் 5ஜி பணி துவங்கியது:

மேக் இன் இந்தியா 5ஜி டெலிகாம் சோதனை திட்டம் 2018 இல் தொடங்கப்பட்டது. இதற்கான நிதியை தொலைத்தொடர்பு துறை வழங்குகிறது. இந்தத் திட்டத்திற்கு தொலைத்தொடர்பு துறை ரூ.224 கோடி செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan