40க்கு 40 உறுதி.. நாம் யார் என்பதை களத்தில் காட்டுவோம் -முதல்வர் ஸ்டாலின்

அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்க மத்திய அரசை அகற்றியே தீருவோம் என்று அண்ணா நினைவு நாளையொட்டி திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. அண்ணா நினைவு நாளில் அவரது நினைவிடத்தை நோக்கி அமைதி பேரணி நடத்தி அஞ்சலி செலுத்த வேண்டும்.

எந்த நாட்டைச் சுற்றினாலும் தென்னாட்டுக் காந்தி என்று போற்றப்பட்ட பேரறிஞர் அண்ணா நம்மோடுதான் இருப்பார். அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்பதே முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களில் முதல் முழக்கம்.  அதனை முன்னெடுத்து, அயாராது உழைத்து, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கான வெற்றி வியூகத்தை வகுக்க வேண்டிய பொறுப்பு நிறைந்த இடத்தில் இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக ஓட்டுகளில் கை வைக்க முடியாது – ஜெயக்குமார்

பாஜக ஆட்சியின் சர்வாதிகார, ஜனநாயக விரோத போக்கிற்கு முடிவுகட்ட வேண்டிய உறுதியுடன் இருக்கிறோம். மக்கள் தாங்கள் விரும்புவதை தேர்ந்தெடுப்பதை உறுதி செய்வதற்கும், மாநில உரிமைகளை கட்டிக்காப்பதற்கும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, தேர்தல் களப் பணிகளை முன்கூட்டியே தொடங்கி மிகுந்த உற்சாகத்தோடு அதனை முன்னெடுத்துச் செல்கிறது கழகம்.

நம்மைத் திசைதிருப்ப அவதூறுகளைப் பரப்புவதில் பா.ஜ.க.வும் அ.தி.மு.கவும் சளைத்தவையல்ல. பொய் வழக்குகளின் பேரில் தங்களை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் மீது மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒன்றே மத்திய பா.ஜ.க அரசின் பத்தாண்டுகால சாதனையாக இருப்பதால் தி.மு.க.வை மிரட்டிப் பார்க்கும் வகையிலான ஊடகப் பரபரப்புக்கான செயல்பாடுகள் இருக்கும்.

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு- பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து..!

எதற்கும் அஞ்சாத இயக்கம்தான் தி.மு.க என்பதைக் களத்தில் ஆற்றும் பணிகள் மூலமாக அவர்களுக்குப் புரிய வைப்போம். நாடாளுமன்றத்தில் இடைக்காலப் பட்ஜெட்டை பா.ஜ.க. அரசு தாக்கல் செய்திருக்கிறது. அதிலும்கூட தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளது. முழுமையான பட்ஜெட்டை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணி அரசு தாக்கல் செய்யும்.

எனவே அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்க மத்திய அரசை அகற்றியே தீருவோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலைவிட கூடுதலாக உழைப்பை வழங்கி கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம் தான். அதிமுகவை வைத்து பாஜக எத்தகைய நாடகம் நடத்தினாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என்பது உறுதி என்றும் என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment