வெளிச்சம் குறைவால் 3-ஆம் நாள் ஆட்டம் நிறுத்தம்- இந்திய அணி 171 ரன் முன்னிலை..!

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 92 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 270 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இந்தியா -இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், முதலில் இந்திய அணி பெட்டிங் செய்தது.

இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 61.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் அதிகபட்சமாக 57 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், ராபின்சன் 3 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டன் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 290 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், ஜடேஜா, பும்ரா தலா 2 விக்கெட்டும், சிராஜ், ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டும் பறித்தனர். இதனால், இங்கிலாந்து அணி 99 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்க்ஸை நேற்று தொடங்கியது. இந்திய அணியில் தொடக்க வீரராக ரோகித் சர்மா, கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.

நேற்றைய 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 16 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 43 ரன்கள் எடுத்து இருந்தனர். இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியதிலிருந்து இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனால் கே.எல் ராகுல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன் எடுத்து  பெவிலியன் திரும்பினார். பின்னர் ரோகித் சர்மா, புஜாரா இருவரும் இணைந்து  அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

 நிதானமாகவும் ,சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா சதம் விளாசி 127 ரன்கள் குவித்தார். மறுபுறம் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புஜாரா 61 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து விராட் கோலி, ஜடேஜா இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் வெளிச்சம் குறைவால் மூன்றாம் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதனால் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 92 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 270 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது இந்திய அணி 171 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

author avatar
murugan