இன்று மழைக்கு வாய்ப்பு.. தென்னாப்பிரிக்கா – இந்தியா இடையிலான 2-வது டி20 போட்டி ..!

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி  டி20 , ஒருநாள்  மற்றும்  டெஸ்ட் தொடர்களில்  விளையாடவுள்ளது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்க இருந்தது.

ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து மழை பெய்ததால் தென்னாப்பிரிக்கா – இந்தியா மோத இருந்த முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கான 2-வது போட்டி இன்று  க்கெபர்ஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ்  மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதன் பின்னர், தொடரின் மூன்றாவது போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மழைக்கு வாய்ப்பு:

டர்பனில் நடைபெற இருந்த முதல் டி20 போட்டியில் மழை குறுக்கிட்டது  போல, இன்றை போட்டியிலும் மழை வரலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, மழையால் போட்டி கைவிடப்படலாம். மாலை 5 மணிக்கு மழை பெய்ய  20 சதவீதம் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஈரப்பதம் 73.5% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், இந்த போட்டி உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும். ஆனால் போட்டியின் நடுவில் பனி வருவதற்கான சாத்தியக்கூறுகள் முற்றிலும் இல்லை என்பது நல்ல செய்தியாக உள்ளது. இதனால் இரண்டாவது போட்டியிலும் ரசிகர்கள் ஏமாற்றமடைவார்களா..? என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

author avatar
murugan