அடேங்கப்பா..! கிரிக்கெட்டில் 1 பந்தில் 286 ரன்கள் எடுத்தார்களா? -மறைக்கப்பட்ட வரலாறு..!

கிரிக்கெட் போட்டியில் 1 பந்தில் 286 ரன்கள் எடுத்த ஒரு அணியின் ஒரு சுவாரஸ்யமான சாதனை வரலாற்றைப் பற்றி பின்வருமாறு காண்போம்.

காலம் காலமாக கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகள் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.ஆனால்,ஒரே பந்தில் 286 ரன்கள் எடுத்து,ஒரே பந்தில் வெற்றியும் பெற்ற சாதனையைப் பற்றி இதுவரை நம்மில் பலர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதவாது,மேற்கு ஆஸ்திரேலியாவில் பண்புர்ரி என்ற பகுதியில்,1894 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி  விக்டோரியா என்ற அணிக்கும்,ஸ்கிராட்ச் XI அணிக்கும் இடையில் ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில்,டாஸ் வென்ற விக்டோரியா அணி முதலில் பேட்டிங் செய்தது.அதன்படி,தனது முதல் பந்தை எதிர்கொண்ட விக்டோரியா அணியின் பேட்ஸ்மேன்,அந்த பந்தை வேகமாக அடித்துள்ளார். அதனால், அந்து பந்து மைதானத்தின் அருகே  இருந்த உயரமான ஜார்ரா மரத்தின் கிளைகளில் சிக்கியது.

அதன்பின்னர்,ஸ்கிராட்ச் XI அணியினர்,மரத்தில் சிக்கிய பந்தை தொலைந்ததாக அறிவிக்குமாறும்,அதற்குப் பதிலாக மற்றொரு பந்தை தருமாறும் நடுவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.ஆனால்,மரத்தில் பந்து சிக்கிய இடம் தெரிந்ததால் பந்து தொலைந்ததாக அறிவிக்க முடியாது என்றும்,மேலும், சிக்கிய பந்தை எடுக்குமாறும் நடுவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில்,விக்டோரியா அணியினர்,ரன்கள் எடுப்பதற்காக ஓடத் தொடங்கினர்.இதனைத் தொடர்ந்து,ஸ்கிராட்ச் XI  அணியினர்,மரத்தில் சிக்கிய பந்தை எடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.அந்த வகையில்,மரத்தை வெட்டுவதற்காக ஒரு கோடாரியை நடுவர்களிடம் கேட்டுள்ளனர்.ஆனால்,நடுவர்கள் தங்களிடம் கோடாரி இல்லை என்று தெரிவித்தனர்.இந்த நிலையில்,பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுப்பதற்காக தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்துள்ளார்கள்.

இதனைத்தொடர்ந்து,அடுத்தகட்ட முயற்சியாக,மரத்தில் சிக்கிய பந்தை,கிளையில் இருந்து வெளியேற்ற ஒருவர் துப்பாக்கியை எடுத்து வந்து,பந்து சிக்கியுள்ள மரக்கிளையை நோக்கி சுட்டார்.இறுதியாக பந்து தரையில் விழுந்தது.ஆனால்,பந்து தரையில் விழுவதற்கு முன்பு யாரும் அதைப் பிடிக்கவில்லை.அந்த நேரத்தில்,விக்டோரியா அணி பேட்ஸ்மேன்கள் 286 ரன்கள் எடுத்திருந்தனர்.அதனால்,விக்டோரியா அணி போட்டியில் வென்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.இந்த சம்பவம் கிரிக்கெட் வரலாற்றிலேயே,ஒரு பந்து வீச்சில் அதிக ரன்கள் எடுத்த உலக சாதனையை உருவாக்கியது. 

இதனையடுத்து,லண்டனில் உள்ள ‘பால் மால் கெஜட்’ என்ற ஒரு ஆங்கில செய்தித்தாள்,இந்த மிகப்பெரிய சாதனையைப் பற்றி 1894 ஆம் ஆண்டு தனது செய்தி இதழிலில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.