18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம்: பின்னணியில் பி.எச்.பாண்டியன்

சென்னை: முதல்வர் பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை; அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று, அ.தி.மு.க.,வின் 19 எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். அதன் பின், புதுச்சேரியிலும், கர்நாடக மாநிலம் குடகு பகுதியிலும் அவர்கள் தங்க வைக்கப்பட்டு, முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை வைத்தனர்.இதையடுத்து, அ.தி.மு.க., சட்டசபை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ., குறிப்பிட்ட 19 பேர் மீதும், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ள, குறிப்பிட்ட 19 பேருக்கும், சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டார்.இதற்கிடையே, கம்பம் தொகுதி எம்.எல்.ஏ., ஜக்கையன், எடப்பாடி முகாமுக்கு மாறினார். இதனால், அவர் மீது மேற்கொள்ளவிருந்த நடவடிக்கையை விலக்கிக் கொண்ட சபாநாயகர், மீதமிருந்த 18 எம்.எல்.ஏ.,க்களையும், தகுதி நீக்கம் செய்து அதிரடியாக அறிவித்தார். முதலில் தயக்கம்: முன்னதாக, 18 பேர் மீதும் தகுதி நீக்கம் நடவடிக்கையை மேற்கொள்ள சபாநாயகர், தயக்கம் காட்டினார். சட்ட விதிகளை மேற்கோள் காட்டி, அவர் மறுக்க, அந்த நேரத்தில், முன்னாள் சபாநாயகர் வழக்கறிஞருமான பி.எச்.பாண்டியனின் ஆலோசனைகள், சபாநாயகர் தனபாலுக்கு வந்து சேர்ந்தன.பி.எச்.பாண்டியனின் அனுபவங்களும், சட்ட அறிவும் தனபாலுக்கு எடுத்துச் சொல்லப்பட்டதும், 18 எம்.எல்.ஏ.,க்களையும், அதிரடியாக தகுதி நீக்கம் செய்ய ஒப்புக் கொண்டார். அதன்படியே, தகுதி நீக்கம் செய்து அறிவிப்பும் வெளியிட்டார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment