விராட் கோலி என்னுடைய சாதனையை முறியடித்தால் அவருக்கு நான் நிச்சயம் இந்த பரிசுதான் கொடுப்பேன்!சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட்டின் கடவுள் என ரசிர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் ,இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை நேரில் தேடிச் சென்று ஒரு ஷாம்பைன் பாட்டில் மதுவை இருவரும் பகிர்ந்து குடிப்போம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஏன், எதற்காக விராட் கோலியை தேடிச்செல்வேன் என்பதை மும்பையில் சமீபத்தில் நடந்த போரியா மஜும்தாரின் ‘லெவன் காட்ஸ் அன்ட் ல பில்லியன் இந்தியன்ஸ்’ புத்தக வெளியீட்டு விழாவில் சச்சினும், விராட் கோலியும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டனர்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 463 போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 49 சதங்களும், 96 அரைசதங்களும் அடங்கும். அதேபோல 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 15,921 ரன்கள் குவித்துள்ளார். இதில் 51 சதங்களும் 68 அரை சதங்களும் அடங்கும்.

இப்போதுள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் சதம் சாதனையை நெருங்கும் தொலைவில் இருப்பவர் விராட் கோலி மட்டுமே. விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 35 சதங்கள் அடித்துள்ளார். இன்னும் 15 சதங்கள் அடித்தால் சச்சினின் ஒருநாள் சதம் சாதனையை விராட் கோலி முறியடித்துவிடுவார்.

இது குறித்து புத்தக வெளியீட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கரிடமும், விராட் கோலியிடமும் கேள்வி முன்வைக்கப்பட்டது. விராட் கோலி உங்களின் ஒருநாள் சதம் சாதனையை முறியடித்து விட்டார். 50 ஷாம்பைன் பாட்டில் மது பரிசாக அளிப்பீர்களா என சச்சினிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சச்சின் டெண்டுல்கர் புன்னகையுடன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,ஒருநாள் போட்டிகளில் நான் அடித்துள்ள 49 சதத்தை முறியடித்து, 50-வது சதத்தை விராட் கோலி அடித்துவிட்டால், அவருக்கு 50 ஷாம்பைன் பாட்டில்களை எல்லாம் அனுப்பிவைக்க மாட்டேன். நானே ஒரு ஷாம்பைன் பாட்டிலை வாங்கி, அவரைத் தேடிச்சென்று பாராட்டுவேன். அவருடன் அந்த ஷாம்பைன் பாட்டிலை பகிர்ந்து, இருவரும் ஒன்றாகக் குடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று தெரிவித்தார். இந்தப்பதிலை சச்சின் கூறியதும் அரங்கில் இருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment