கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் 52ஆவது கல்லூரி ஆண்டு விழா!

தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன்.
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் 52ஆவது கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சியில் அவர் மேலும்  பேசியது:  காலதாமதம், மறதி, சோம்பல், தூக்கம் இந்த நான்கு விசயங்களை மாணவர்கள் தவிர்த்தால் அது உங்களுடைய கல்விக்கும், வளர்ச்சிக்கும் நன்றாக இருப்பது மட்டுமின்றி, உங்களால் எதையும் சாதிக்கவும் முடியும்.  கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தினால் அது வெற்றி, தவறவிட்டால் அது தோல்வி.
இதுதான் வெற்றிக்கும், தோல்விக்கும் உள்ள வித்தியாசம். மாணவர் பருவத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வி, ஒழுக்கம், வாழ்வியல் முறைகளை கல்லூரி பருவத்தில் கற்றுக் கொள்ள வேண்டும்.  மாணவர்கள் அதிகளவில் நூல்களைப் படிக்க வேண்டும்.
நூல்களைப் படிப்பதன் மூலமாக பொதுஅறிவு சார்ந்த விசயங்களைக் கற்றுக் கொள்வதில் மட்டுமின்றி நமது வாழ்விற்கும் அது உறுதுணையாக இருக்கும். வாழ்க்கையில் சோம்பலையும், அச்சத்தையும் தவிர்த்தால் மட்டுமே நம்மால் எதையும் சாதிக்க முடியும். வெற்றி பெற முடியும் என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, பல்கலைக் கழகத் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற முதுகலை கணிதவியல் துறை மாணவி முனீஸ்வரி, ஆங்கிலப் பாடத்தில் 9ஆம் இடம்பெற்ற கணிதத் துறை மாணவி பிரியதர்ஷினி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சு.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தார். தொடர்ந்து, கல்லூரி முதல்வர் 2017-18ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார். தொடர்ந்து, மாணவர், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில், எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியம் மற்றும் மாணவர், மாணவிகள், ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி அலுவலர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேதியியல் துறை இணைப் பேராசிரியை பா.உமாதேவி வரவேற்றார். கணிதத் துறை இணைப் பேராசிரியை சுப்புலட்சுமி நன்றி கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment