கோவில்பட்டியில் கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு!

கோவில்பட்டி புதுகிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி என்ற ரமேஷ் (வயது 42). தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரான இவர் முன்னாள் நகரசபை கவுன்சிலர் ஆவார். இவர் கோவில்பட்டி-கடலையூர் ரோட்டில் எலக்ட்ரிக்கல் கடையும், அதன் மாடியில் சர்வீஸ் மையமும் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் தனது கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு மேஜையில் இருந்த ரூ.3,200-ஐ திருடினர். பின்னர் மாடியில் உள்ள சர்வீஸ் மையத்தின் பூட்டை உடைத்து, அங்கிருந்த ரூ.3,600-ஐ திருடிச் சென்று விட்டனர்.

நேற்று காலையில் ரமேஷ் தனது கடைக்கு சென்றபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடையில் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த 19-ந்தேதி இரவில் கோவில்பட்டி-கடலையூர் ரோடு, லாயல்மில் காலனி சந்திப்பில் கணேசன் (68) என்பவரது ஓட்டலின் பூட்டை உடைத்து, ரூ.7,600-ஐ மர்மநபர்கள் திருடிச் சென்றனர். எனவே தொடர் திருட்டில் ஈடுபடும் மர்மநபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment