ரேஷன் கடையில் உயிரிழந்த இளைஞர்.! பொங்கல் பரிசுகளுடன் ரூ.50 ஆயிரம் மாயமானதால் ஊழியர்கள் அதிர்ச்சி.!

  • தமிழகத்தில் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் தலா ரூ.1000 மற்றும் பொங்கல் பொருட்கள் நேற்றிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
  • திருவாரூரில் நடராஜ் என்ற இளைஞர் ரேஷன் கடையில் மயங்கி கீழே விழுந்து கடை வாசலிலே உயிரிழந்தார், பின்னர் சேலம் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுகளுடன், ரூ.50 ஆயிரம் பணம் மாயமானதால் ஊழியர்கள் அதிர்ச்சி.

தமிழகத்தில் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் தலா ரூ.1000 மற்றும் பொங்கல் பொருட்கள் நேற்றிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரிசு தொகை கடந்தாண்டில் இருந்து அமலுக்கு வந்தது என குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் 2 கோடியே 5 லட்சம் அரிசி ரேஷன் கார்டு இருப்பவர்கள் பயன் பெறுவார்கள். ரூ.1000 பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்ற பொங்கல் பரிசில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், வரும் 12-ம் தேதி வரை பொங்கல் பரிசை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் வரும் 13-ம் தேதி பெற்றுக் கொள்ளலாம் எனவும் அரசு அறிக்கையில் வெளியிட்டிருந்தது. இதனால் நேற்று காலை முதலே தமிழக மக்கள் ரேஷன் கடைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் அனைகுப்பம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்ற இளைஞர் ஆணைக்குப்பம் ரேஷன் கடையில் பொங்கல் பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் பணத்தை வாங்குவதற்காக இரண்டு மணி நேரமாக காத்திருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்த அந்த இளைஞர் ரேஷன் கடை வாசலிலே உயிரிழந்தார். இச்சம்பவம் அருகில் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது ஒருபுறமிருக்க சேலம் கிச்சிப்பாளையம் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுகளுடன் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் பணம் மாயமானதால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அப்பகுதியில் பொங்கல் பரிசு விநியோகம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்