விஜய் விழுந்து விடுவாரா? அல்லது துணிந்து நிற்பாரா? -கே.எஸ்.அழகிரி

நடிகர் விஜய் விழுந்து விடுவாரா? அல்லது துணிந்து நிற்பாரா? என்பது அவருடைய கையில்தான் உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.இதில் பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில்  கணக்கில் வராத ரூ.77  கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை சார்பில் அறிக்கையாக தெரிவிக்கப்பட்டது. அதே போல் நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்றது.மேலும் விஜய்யிடம் அவரது  இல்லத்தில் மட்டும் சுமார் 23 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.இதன் பின்னர் நடிகர் விஜய் நெய்வேலியில் நடைபெறும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார்..இதற்கு இடையில்  10 பேர் கொண்ட பாஜகவினர் என்எல்சி 2-வது சுரங்கத்தின் முன் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தர்மபுரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.அவர் பேசுகையில்,  நடிகர் விஜய்க்கு ஏராளமான இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளனர்.எனவே மத்தியில் ஆள்வோரின் கவனம் நடிகர் விஜய் மீது உள்ளது.  பாஜக விஜய்க்கு குறி வைத்துள்ளது . ரஜினி போல, விஜய் கீழே விழுவாரா என்பது ஒரு வாரத்தில் தெரியும்.  விழுந்து விடுவாரா? அல்லது துணிந்து நிற்பாரா? என்பது அவருடைய கையில்தான் உள்ளது.இந்த சோதனையை நடிகர் விஜய் துணிவுடன் எதிர்கொண்டால்  நாம் அனைவரும் அவருக்கு துணையாக நிற்போம் என்று பேசினார்.