தமிழகம் தான் ரஜினிக்கு நன்றி சொல்லவேண்டும்.! துக்ளக் பத்திரிகையின் எடிட்டர் பதிவு.!

  • துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் நடத்திய பேரணி குறித்தும், செருப்பு வீச்சு குறித்தும், கற்பனையாக நான் எதையும் கூறவில்லை. அதனால் நான் மன்னிப்புக் கேட்க முடியாது என்று தெரிவித்தார்.
  • துக்ளக் பத்திரிகையின் எடிட்டர் குருமூர்த்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் ஆன்மிக அரசியலின் வெளிப்பாடு தான் இது என்று கூறி, தமிழகம் தான் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும், என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த 50-வது ஆண்டு துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, அவ்விழாவில் பேசுகையில் பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மேலும்,செருப்பு மாலை அணியப்பட்டது என்று ரஜினி பேசினார். இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் ரஜினிக்கு ஆதரவாக ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினியின் இந்த பேச்சிற்கு எதிராக தமிழகத்தில் பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ரஜினியின் வீடு முற்றுகையிடப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும், நேற்று மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே பெரியாரைப் பற்றி ரஜினிகாந்த் தவறாக பேசியதாகவும், அவதூறு பரப்பி வருவதாகவும் கூறி ஆதித் தமிழர் கட்சியினர் ரஜினியின் உருவ பொம்மையை எரித்து அவர்கள் எதிர்ப்பை காட்டினர். பின்னர் அவர்களை காவல்துறை கைது செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் இன்று பேட்டி ஒன்று அளித்தார், அதில் துக்ளக் விழாவில் நான் கற்பனையாக எதுவும் பேசவில்லை. 1971-ல் பெரியார் நடத்திய பேரணி குறித்தும், செருப்பு வீச்சு குறித்தும், கற்பனையாக நான் எதையும் கூறவில்லை. அதனால் நான் மன்னிப்புக் கேட்க முடியாது என்றும், மறுக்கப்பட வேண்டிய ஒன்று அல்ல, மறக்கப்பட வேண்டிய ஒன்று என கூறினார். மேலும் அவங்க பார்த்தை அவங்க சொன்னாங்க, நான் கேள்விப்பட்டத நான் சொன்னேன். ராமர், சீதை ஆடையில்லாமல் ஊர்வலம் எடுத்து சென்றதாக Outlook india என்ற செய்தித்தாளில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே துக்ளக் பத்திரிகையின் எடிட்டர் குருமூர்த்தி அவரது ட்விட்டர் பக்கத்தில், ரஜினியின் இன்டர்வியூ நடந்துகொண்டிருக்கிறது, பாருங்கள் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து ஆன்மிக அரசியலின் வெளிப்பாடு தான் இது. யாருடைய நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி இழிவுப்படுத்துவது தவறு என்பதைத் தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் அவருக்கு தான் தமிழகம் நன்றி செலுத்த வேண்டும், என்று பதிவிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்