தொடர் சரிவுக்கு பிறகு மீண்டது இந்தியப் பங்குச் சந்தைகள்!

வர்த்தகம்,  மூன்று நாள் சரிவுக்குப் பிறகு இன்று காலை பங்குச்சந்தைகளில் உயர்வுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பட்ஜெட்டில் நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு 10 சதவீத வரி விதிக்கும் அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன.

இந்நிலையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கப் போவதாக வெளியான தகவலால் அமெரிக்க பங்குசந்தையில் ஏற்பட்ட சரிவு ஆசிய மற்றும் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது.

3 நாட்களில் சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்தனர். இந்நிலையில் இன்று பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கின. சென்செக்ஸ் நேற்று காலை ஆயிரத்து 240 புள்ளிகள் சரிந்த நிலையில் மாலையில் சரிவில் இருந்து மீண்டு 561 புள்ளிகள் சரிவுடன் 34 ஆயிரத்து 196 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

இந்நிலையில் இன்று காலை 367 புள்ளிகள் உயர்வுடன் 34 ஆயிரத்து 563 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தொடர்ந்து அதிகபட்சமாக 470 புள்ளிகள் உயர்வடைந்த சென்செக்ஸ் அதிகபட்சமாக 34 ஆயிரத்து 666 புள்ளிகளைத் தொட்டது.

அதேபோன்று நேற்று காலை நிஃப்டி 369 புள்ளிகள் சரிவடைந்த நிலையில் மாலையில் சரிவு 168 புள்ளிகளாக குறைந்து, 10 ஆயிரத்து 498 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று நிஃப்டி 116 புள்ளிகள் உயர்வுடன் அதிகபட்சமாக 10 ஆயிரத்து 614 புள்ளிகளைத் தொட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment