நான் சொன்னதால் தான் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தியானம் செய்தார் -குருமூர்த்தி பரபரப்பு பேச்சு

நான் கூறியதாலேயே ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தியானம் செய்தார் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து  முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.மேலும் இவரது தலைமையில் ஒரு அணி இருந்தது.
பின் ஓ.பன்னீர்செல்வம்  முதல்வர் பதவியை இழந்த நிலையில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.இவரின் இந்த செயல் அந்த சமயத்தில் பெரும் பேசும் பொருளாக இருந்து வந்தது.
தமிழகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.பிரிந்து சென்ற பன்னீர்செல்வமும் அவரது அணியும் பின்னர் பழனிசாமியுடன் இணைந்தனர்.தற்போது பன்னீர் செல்வம் துணை முதல்வராக பதவி வகித்து வருகின்றார்.
இந்த நிலையினில் திருச்சியில் நடைபெற்ற  துக்ளக் பத்திரிக்கையின்  விழாவில் அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,நான் கூறியதாலேயே ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தியானம் செய்தார். ஓபிஎஸ் தியானம் செய்ததன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஓபிஎஸ்சின் தியானத்திற்கு பின் பிரிந்து கிடந்த அதிமுகவை ஒருங்கிணைத்தேன் என்று  துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.