அமலாக்கத்துறை வைர வியாபாரி நீரவ் மோடியை பிடிப்பதற்காகவும், வெளிநாடுகளில் உள்ள அவரது சொத்துகளை முடக்குவதற்காகவும் 6 நாடுகளின் உதவியை நாடுகிறது.
வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கடன் பெற்று விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து வங்கி அதிகாரிகள் உள்பட 12 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன. நீரவ் மோடியும், அவரது உறவினரும் – தொழில் பங்குதாரருமான மெஹுல் சோக்சி ஆகியோர் தற்போது எந்த நாட்டில் உள்ளனர் என்பதும் மர்மமாகவே உள்ளது.
இந்த நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி செய்த மோசடிக் கணக்கில் மேலும் ஆயிரத்து 300 கோடி ரூபாய் சேர்ந்திருப்பதாக புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நீரவ் மோடி, மெஹூல் சோக்சி ஆகியோர் இன்று மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டும் ஆஜராகவில்லை.
இதை அடுத்து நீரவ் மோடி குறித்த தகவல்களை அறிய ஹாங்காங், அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், ஆகிய நாடுகளின் உதவி வேண்டி கடிதம் அனுப்புவதற்கான அனுமதியை அமலாக்கத்துறை பெற்றுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.