பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க முடியாது-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்

பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளி வழியாக பறக்க அனுமதி மறுத்துவிட்டது பாகிஸ்தான் அரசு.

இந்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும்,அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க உள்ளதாகவும் அறிவித்தது.ஆனால் இந்தியாவின் இந்த அறிவிப்புக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 21-ஆம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளார்.இதனால் இந்தியா சார்பில் பாகிஸ்தானிடம் அந்நாட்டு வான்வழியாக பறக்க அனுமதிகோரியிருந்தது.இந்த நிலையில்  பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளி வழியாக பறக்க அனுமதிக்க முடியாது என்பதை இந்தியாவிடம் தெரிவித்துவிட்டோம் என்று  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பாகிஸ்தான் அரசு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  சென்ற  விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் செல்ல மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.இதனால் இந்தியாவின் கோரிக்கையை மீண்டும் பாகிஸ்தான் அரசு நிராகரித்துள்ளது.