அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது-கமல் ஹாசன்

அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்படும் சூழல் நிலவுகிறது. பொதுமக்களிடம் தனி நபர் இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தன்னார்வாளர்கள் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வந்தனர். இதனால், பல்வேறு இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என புகார்கள் வந்தன.

இதனை அடுத்து தமிழக அரசு, ‘ இனி தன்னார்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் யாரும் தனிப்பட்ட முறையில் நிவாரண பொருட்களை வழங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. நிவாரண பொருட்கள் வழங்க விருப்பமானவர்கள் நிதியுதவியை அரசின் நிவாரண உதவி வங்கி கணக்கிற்கோ , பொருளதவியாக கொடுக்க நினைப்பவர்கள் பெரு மாநகராட்சி ஆணையர்களிடமோ அல்லது அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடமோ கொடுக்கலாம் என்று அறிவித்தது . இதனை மீறுபவர்கள் ஊரடங்கை மீறியதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,அண்டை மாநிலங்கள் சில கொரோனா உடன் போராட தனியார்,இளைஞர்,ஓய்வு பெற்ற மருத்துவர் எனப்பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள் என்று பதிவிட்டுள்ளார்.