ஒத்திவைக்கப்பட்ட இடங்களில் ஜனவரி 30-ஆம் தேதி தேர்தல் – ஆணையம் அறிவிப்பு

  • மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
  • ஒத்திவைக்கப்பட்ட இடங்களில் ஜனவரி 30-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 11-ஆம் தேதி  மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ,மாவட்ட  ஊராட்சி  துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.
ஆனால் பல்வேறு காரணங்களுக்காக சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்,  26 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், 42 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் 266 ஊராட்சித் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது, நிறுத்தப்பட்ட 335 பதவிடங்களுக்கு மறைமுக தேர்தல் ஜனவரி 30-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. ஜனவரி 30-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கும்,பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட  ஊராட்சி  துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.