மக்களிடம் அனுதாபத்தை தேடவே மேடைகளில் துரைமுருகன் அழுகிறார் – சண்முகம் பேச்சு !

மக்களிடம் அனுதாபத்தை தேடவே மேடைகளில் திமுக பொருளாளர் அழுகிறார் என்று வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் தெரிவித்துள்ளார்.

பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்ட வேலூர் தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் 5 ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில்,ஆம்பூரில் திமுக தேர்தல் பணிமனையை பொருளாளர் துரைமுருகன் நேற்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், எங்கள் வீட்டு தோட்டத்தில் பணம் பதுக்கியது யார் என்று எங்களுக்கு தெரியும், என் மகனை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றதும் தெரியும் என்று கண்ணீர் மல்க பேசினார்.

இந்நிலையில், மக்களிடம் அனுதாபத்தை தேடித் கொள்ளவே துரைமுருகன் மேடைகளில் அழுகிறார் என்று ஏ.சி சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் திமுக சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்று கூறுவது நாடகம் என்றும் கடந்த தேர்தலில் துரைமுருகன் என்னை முதுகில் குற்றிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.